அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தல் : வெளியான அறிவிப்பு
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று முதல் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த குறித்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறைமை மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த மாதம் 11 ஆம் திகதி கொட்டாவ மற்றும் கடவத்த சந்திப்புகளில், இதன் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.