எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள வசதி
இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நேற்றையதினம் (14.07.2025) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சில வாரங்களுக்கு முன்பு, எங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தது.
எனவே இந்த மாத இறுதிக்குள் மேல் மற்றும் தென் மாகாணங்கள் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களை இணைப்பதன் மூலம் முதல் கட்டமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
அதன் பிறகு, மிக விரைவான திட்டத்தின் கீழ், செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி நேரடியாக அபராதம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.