கெஹெலியவின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் பேரில் அவர்கள் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார போல்கஸ்தெனிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணமோசடி குற்றச்சாட்டின் கீழ், 134,097,731.39 ரூபா மதிப்புள்ள சொத்துக்கள், 40,000,000 ரூபா மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 20,500,000 ரூபா மதிப்புள்ள பென்ஸ் கார் தொடர்பான விசாரணையை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
குறித்த விசாரணை தொடர்பாக, ஏறத்தாழ 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.