பற்றி எரியும் அமெரிக்கா..! லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் (Karen Bass) ஆல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் (USA) முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளால் ட்ரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கும் (ICE) எதிராக வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியது.
குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
இந்நிலையிலேயே லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார்.