பாரிய மோசடி – நிறுத்தப்படும் கல்விக்கான நிதியுதவி!

நாட்டில் கல்வித் திட்டங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சை எச்சரித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி பிரதிநிதிகள் கல்வி அமைச்சு (Ministry of Education) அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட கடன் உதவியின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லாததே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்வி சீர்திருத்தங்களுக்கு வழங்கப்பட்ட தொண்ணூற்றொன்பது மில்லியன் டொலர் கடன் உதவி குறித்து பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாடத்திட்ட நவீனமயமாக்கல், பாடசாலை பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தொகுதி முறையை (Module) செயல்படுத்துதல் மற்றும் பாடசாலை மதிப்பீட்டு முறையை நெறிப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்தப் பணம் பெறப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிறுவனம் இந்தத் திட்டங்களில் ஒன்றைக் கூட செயல்படுத்த முடியவில்லை என்றாலும், ஆயத்த திட்டங்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவழித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில், குறித்த திட்டங்களுக்காகப் பெறப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் கூட காலாவதியாகிவிட்டதாக ஆசிய வளர்ச்சி வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை, ஆசிய அபிவிருத்தி வங்கி 42 கல்வித் திட்டங்களுக்காக சுமார் 1330 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்கள் மற்றும் உதவிகளை நாட்டிற்கு வழங்கியுள்ளது.

இதன்படி, கடன்கள் மற்றும் உதவி கோரப்பட்ட சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அந்தத் திட்டங்களுடன் தொடர்புடைய செலவுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, திட்டங்களில் முன்னேற்றம் இல்லாததற்கு யார் பொறுப்பு என்பதை வெளிப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button