மருந்து கொள்வனவை துரிதப்படுத்தும் சுகாதார அமைச்சகம்
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக இலங்கையின் சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருந்துத் துறையினர் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும், குறித்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மருந்து விநியோகச் சங்கிலியில் தற்போதுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இடையூறுகள் குறைக்கப்படும் வரை, வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடி உதவியைப் பெற அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வழிமுறையின் கீழ் எதிர்கால நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு செயற்படுத்த, ஒரு குழுவை அமைக்கவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் பிறகு, தேசிய கொள்முதல் ஆணையகத்தின் ஒப்புதலுடன், அமைச்சகம் தேவையான இறுதி ஒப்புதல்களுக்காக, அமைச்சரவைக்கு ஒரு புதிய திட்டத்தை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசாங்கத்திற்கு – அரசாங்கத்திற்கு அடிப்படையில் மருந்துகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்கள் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, துருக்கி மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.