வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம ஒன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.
2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட ரூபா 1,600,000/- மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000/- எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வகையில் நிரந்தர வீடமைப்பு திட்டத்தை நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அmதன்படி, 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 1,500,000 வரை அதிகரித்தல் மற்றும் 340 சதுர அடி வீட்டினை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 900,000 வரை அதிகரித்தல் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.