2029-ல் புதிய பாடத்திட்டம் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
2026 – ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்தார்.
இது தொடர்பான ஆசிரியர் பயிற்சி குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 2026 முதல் தரம் 1 மற்றும் 6-க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், 2028-ல் தரம் 10-க்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் 2029-ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் எனவும் மற்றும் தரம் 9 முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கூறினார்.
கல்வி சீர்திருத்தங்கள் பாடத்திட்டத் திருத்தம், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தொடர்பு செயல்முறை, முறையான மதிப்பீடு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும், மனப்பான்மை நிறைந்த ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவனங்களின் பொறுப்பு எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த சீர்திருத்தங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, முறையான மதிப்பீட்டு செயல்முறையை உருவாக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு துறைத் தலைவர்களும் தங்கள் துறைகளின் மூலம் சீர்திருத்தங்களை செயல்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர்.