முப்படையினர் தொடர்பில் எடுக்கப் பட்டுள்ள விசேட முடிவு

புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி, அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,”மட்டக்களப்பு, மாந்தீவில் புனர்வாழ்வளிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுடன் நீதி அமைச்சும் இணைந்து முன்னெடுத்த கலந்துரையாடலில் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, தற்போது தொற்று நோய் சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாந்தீவினை வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண இணக்கம் தெரிவித்துள்ளார். இது 90 – 95 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பாகும். 40 ஏக்கர் பயிச்செய்கை நிலம் காணப்படுகிறது.

அத்துடன் இவ்வருடத்துக்குள் வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்வதற்கும், அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரம் போதாது என்பதால் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும், உரிய தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாவர்.

எனினும் இவ் அனைவருக்கும் புனர்வாழ்வளிப்பதற்கு தற்போதுள்ள புனர்வாழ்வளிப்பு நிலையங்கள் போதுமானவையல்ல. எனவே அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கந்தளாய் பழைய சீனி தொழிற்சாலைக்குரித்தான 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 22 கட்டடங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று வவுனியாவில் ஒன்றிணைந்த புனர்வாழ்வளிப்பு நிலையத்தின் ஊடாக ஒரே சந்தர்ப்பத்தில் 100 பெண்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சமூக சீர்திருத்த முறைமையையும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகளை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாகவுள்ளது.”என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button