தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் விசேட கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு (Election Commission of Sri lanka) 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதேநேரம், கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 3,828 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button