சில மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம்!

அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலையை 15 – 20% வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் நேற்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தம் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) பொய்யொன்றை கூறியதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தியதாக கஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

2022 – 2023இல் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி விலையில் சப்ளையர்களிடம் இருந்து எரிபொருளை பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை எரிபொருள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பலன்களின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் ரூ. எண்ணெய் விலையை 15-20% வரை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான அனைத்து வரிகளையும் நீக்கும் யதார்த்தத்தை ஏற்கனவே உணர்ந்து செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையை தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 30 ஆம் திகதி ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பெட்ரொலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button