காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை குறித்து வெளியான தகவல்
காங்கேசன்துறை (Kankesanturai) – நாகப்பட்டினம் (Nagapattinam) இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய நாட்கள் இந்த கப்பல் சேவையானது இடம்பெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை குறித்த கப்பல் சேவையானது தற்போது எவ்வித தடங்கலும் இன்றி சிறப்பாக இடம்பெற்று வருவதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் காலநிலை சாதகமின்மை காரணமாக மூன்று நாட்கள் சேவை தடைப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமும் நாகப்பட்டினத்தில் இருந்து 80 பயணிகளும் காங்கேசன்துறையிலிருந்து 80 பயணிகளுமாக நாளொன்றுக்கு 160 பயணிகள் வீதம் கப்பல் சேவையை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இச் சேவையின் ஊடாக பயன்பெற்று இருப்பதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.