அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
மின்சாரக் கட்டணத்தில் ஓரளவு விலை அதிகரிப்பு ஏற்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் மின்சார கட்டண திருத்தத்தின் போது, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட அதிகமாக இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.