அமைச்சரவையின் தீர்மானம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக மேற்கொண்ட பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஜே.சி.வெலியஅமுன, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில்லை என அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும், சட்டமா அதிபர் நேரில் ஆஜராகி அது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரரின் மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பின், இந்த மனுக்களை நவம்பர் 21ம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button