உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, தற்போது அரசியல் நோக்கத்துக்காக தாம் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை முன்வைத்துள்ளததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தாம் அரசியல் பயணத்தில் முறையற்ற வகையில் சொத்து சேர்க்கவில்லை எனவும் நீதிமன்றத்தின் கட்டளையை மதித்து 15 மில்லியன் ரூபா செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மிகுதி தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறித்த காலப்பகுதிக்குள் அதனை சமர்ப்பிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனான வகையில் இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு, இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு தாம் இலக்காவதாகவும் கூறியுள்ளார்.