டெங்கு நோய் பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்
இவ்வாண்டில் டெங்கு நோய் பாதிப்பால் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வைத்தியர் சுதத் சமரவீர கூறுகையில், நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.
இதனடிப்படையில், அதிக ஆபத்துள்ள MOH பிரிவுகளை இலக்காகக் கொண்டு ஒரு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.