இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய பின்னடைவு – நாட்டை விட்டு வெளியேறும் ஜப்பானிய நிறுவனம்

ஜப்பானிய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான Mitsubishi இலங்கையில் தனது செயற்பாடுகளை அடுத்த மாதம் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை மற்றும் இலகு ரயில் திட்டம், இயற்கை திரவ வாயு திட்டம், பாதகமான சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் உள்ளிட்ட புதிய ஜப்பானிய திட்ட முன்மொழிவுகளை திடீரென இரத்து செய்தமை ஆகியவை Mitsubishi தனது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வழிவகுத்த காரணிகளாகும்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பிரதான பங்காளியான Mitsubishi, ஏறக்குறைய அறுபது வருடங்களாக இலங்கையின் சில உட்கட்டமைப்பு திட்டங்களில் பிரதான பங்குதாரராக இருந்து வருகின்றது.

மிட்சுபிஷியின் கொழும்பு அலுவலகத்தை மார்ச் 31ஆம் திகதி மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தனியார் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்ததுடன் மிட்சுபிஷியின் இந்த முடிவால் இலங்கை பெரும் பின்னடைவை சந்திக்கும் என உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான், இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநராக உள்ளதுடன், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, இலங்கை, ஜப்பானுக்கு 2.46 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

மிட்சுபிஷி வெளிநாட்டில் திறக்கப்பட்ட முதல் அலுவலகங்களில் இலங்கை அலுவலகமும் ஒன்று என்றும், இலங்கையின் பல நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு மிட்சுபிஷி பங்களித்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையால் நிதியளிக்கப்பட்ட பல திட்டங்களில் மிட்சுபிஷி ஒரு முக்கிய செயல்பாட்டு பங்காளியாக இருந்தது.

மிட்சுபிஷி நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தில் இருபது ஊழியர்களே உள்ள போதிலும், நிறுவனத்தின் வர்த்தக மற்றும் திட்டத் துறைகள் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button