ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை ஜூன் 3 ஆம் திகதி ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
சதொச ஊழியர்களை (Lanka Sathosa) அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மற்றும் மூன்று பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ்.எஸ் சபுவிதவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதிகாரி, உத்தியோகபூர்வ வேலைக்காக வெளிநாட்டில் இருப்பதால், சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தை கோரினார்.
அதன்படி, மேலதிக சாட்சி விசாரணைகளை ஜூன் 3 ஆம் திகதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார், மேலும் அன்றைய தினம் சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.