இலங்கைக்கு வரவுள்ள அதிவேக இணைய சேவை

இலங்கைக்கு வரவுள்ள அதிவேக இணைய சேவை: எலோன் மஸ்க்கின் புதிய திட்டம் | Elon Musk Will Come To Sri Lanka To Start Starlink

அதிவேக இணைய சேவையை ஆரம்பிப்பதற்காக இந்த வருட இறுதியில் எலோன் மஸ்க் (Elon Musk) நாட்டிற்கு வரவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்தார்.

“Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம் நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு இணைய வசதிகளை பிரச்சினையின்றி வழங்க முடியும் எனவும் அவர் மேலும்  சுட்டிக்காட்டினார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ருவன் விஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “10 ஆவது உலக நீர் மாநாடு (World Water Forum) இந்தோனேசியாவின் (Indonesia) பாலி (Bali) தீவில் கடந்த 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

அந்த விஜயத்தின் போது, அதிபர் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதன்போது “Starlink” திட்டத்தை  இலங்கையில் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் சுட்டிக்காட்டினார். இத்திட்டம்  இலங்கையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமாயின் அதிபரின் ஆதரவு தேவை என எலோன் மஸ்க் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். எனவே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இந்த வருட இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உண்மையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தலைவர் எலோன் மஸ்க் போன்ற உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

இவ்வாறானதொரு செயற்திட்டத்தை இலங்கையில் ஆரம்பிப்பதன் மூலம்  இலங்கை முழு உலகிற்கும் திறக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உலகெங்கிலும் பரவும். இதன் மூலம் உலகின் கோடீஸ்வர வர்த்தகர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், “Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம், நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு எந்த சிக்கலும் இன்றி இணைய வசதிகளை வழங்க முடியும். அது சுற்றுலாத் துறை உட்பட பொருளாதாரத்திற்குப் பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சலுகைக் கட்டண முறைகளின் கீழ் இணைய வசதிகளை வழங்குவது குறித்தும் அதிபர் கவனம் செலுத்தியுள்ளார். எதிர்காலத்தில் நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“Starlink” திட்டம் தற்போது உலகில் 99 நாடுகளில் பரவியுள்ளது. மாலைதீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வரும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது  இலங்கை அரசியலில் வழக்கமாகிவிட்டது. ஒரு விடயத்தை ஒருவர் வெற்றிகரமாகச் செய்யும்போது, அதற்கு தடைகளை ஏற்படுத்துவதும், அந்த முயற்சிகளுக்கு இடையூறு செய்வதும் அரசியலில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

ஆனால் இதுபோன்ற உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களை இந்த நாட்டுக்கு முதலீட்டாளர்களாக அழைப்பதை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button