ஒற்றை ஆட்சிக்குள் காவல்துறை அதிகாரம் இன்றிய அதிகாரங்கள்!

காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு, கொள்கை விளக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும்.

இருப்பினும் காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் துரிதமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அதிபர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button