தேர்தல் நேரத்தில் மைத்திரியின் அரசியல் வியூகம் ஆரம்பம்!

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள எத்தகைய தேர்தலை எதிர்கொள்வதற்கும் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சியின் பலமான அமைச்சர் ஒருவரின் தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் இணையும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைப்பாளர் பதவிகள் வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பலர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக மொட்டுவை விட்டு வெளியேறி நாடாளுமன்றத்தில் தனியான குழுவாக உள்ள எம்.பி.க்கள் குழுவும் மீண்டும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு உபதலைவர் பதவி வழங்குவதற்கு அண்மையில் இடம்பெற்ற மத்திய குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்தார். அதற்கு தயாசிறி எம்.பி இதுவரை பதிலளிக்கவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button