பிரதமரை பதவி விலக்கும் சர்ச்சை – அரசுக்குள் குழப்பம்..! பதிலளித்த ஹரிணி
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்த சக்தியாலும் அசைக்கவே முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பிரதமரை மாற்ற வேண்டுமா, இல்லையா என்பதை ஜனாதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன அவசரம்? பிரதமர் பதவியை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை.
ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் கேள்விக்குட்படுத்தவில்லை. ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசும் என் மீது அழுத்தங்கள் எதனையும் இதுவரை பிரயோகிக்கவில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகள் வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.
உண்மை நிலைமைகளை ஊடகங்கள் தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு. இந்த அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.
நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது என்றார்.