தனுஷ்க குணதிலக மீதான தடைகளை நீக்கியது அவுஸ்திரேலிய நீதிமன்றம்!
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அண்மையில் பாலியல் வழக்கில் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்வதற்கும் நீதிமன்றம் அவருக்கு தடை விதித்திருந்தது.
டிண்டர் செயலி ஊடாக அறிமுகமான பெண் ஒருவருடன் சிட்னியின் கிழக்குப் புறநகர் பகுதியில் விருப்பமில்லாத உடலுறவு கொண்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய நீதிமன்றம் தனுஷ்கவுக்கு பிணை வழங்கியிருந்ததுடன், டிண்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்திருந்தது.
இந்தநிலையில், இவரது பிணை விண்ணப்ப கோரிக்கையை ஏற்ற நீதவான் ஜெனிபர் அட்கின்சன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியில் செல்லவும் தனுஷ்கவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்ததுடன், இரவில் மீண்டும் அவர் குற்றத்தில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் வாதிட்டுள்ளார்.
தனுஷ்க தடைகளை மீறி மீண்டும் தவறிழைத்தால், விசாரணைகள் அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.